Friday, March 11, 2016

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இளநிலைநீதிபதியாகஇருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன், ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி குணரத்தினம், மற்றும் புற்றுநோய் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லாவண்யா திருச்செல்வம்கைலை ஆகியோரே இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

Thursday, March 10, 2016

தலைவலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்.

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

Wednesday, March 9, 2016

அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது சட்ட ரீதியானதா? சம்பந்தன் கேள்வி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது சட்டரீதியில் சரியானதா – அவ்வாறெனில் நிரூபிக்க முடியுமா?  என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

" E MAIL "ஐ கண்டுபிடித்த தமிழர் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ் நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!!

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1500 இலங்கையர்களுக்கு 15ம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…

 'ஜனாதிபதியிடம் கூறுங்கள்' சேவைக்கு 44,677 முறைப்பாடுகள் குவிந்தன

ஜனாதிபதியிடம் கூறுங்கள்' நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 44,677 முறைப்பாடுகள்இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

Monday, March 7, 2016

சர்க்கரை நோய்க்கு அற்புதமான இயற்கை வைத்திய

440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.
என் குடும்ப நண்பனக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு.

சுவையான சுத்தமான குடிநீர்.

சுவையான குடிநீர்''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.

மகளிர் தினம் 2016 - ஓர் தொகுப்பு

மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.

இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியுமா?  

1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை ஆகியவற்றுக்காக அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவர்கள் பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பெண்களை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன், அவர்களை தன் இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரண்மனை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.

அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரை திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினான். ஆனால், அவனால் வாக்குறுதிப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். 

அந்த மார்ச் 8ம் தேதிதான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக  அமைந்தது. இதேபோல், அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரான நியூயார்க்கில், நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் 

பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.
காப்பிய நாயகிகள்
சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.
பெண்பாற் புலவர்கள்
சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.
இலக்கியத்தில் பெண்ணின் பெருமை
பக்தியை பேசும் இலக்கியத்தில் பெரிய புராணம் முதன்மையானது. 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இருபத்தியொருவர் நாயன்மாரது மனைவியர், தாயார் நால்வர், மகள்மார் இருவர், உடன் பிறப்பு ஒருவர், காரைக்காலம்மை, இசைஞானியார், மங்கயர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த, சிறுத் தொண்டர் மனைவியை "மனையறத்தின் வேராகி" என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார்.. புராணக் கதைகள் கற்பனை என்று சாதித்து வாதிப்பவரும் உண்டு.
வீர மங்கைகள்
சங்க காலத்தில் வீரத்தின் விளை நிலமாகவும் பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் தீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் படித்திருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா? இவையே ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பதை நிரூபித்துள்ளது.
பாரதியும் பெண்ணியமும்
பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார், தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. தொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பறைசாற்றின.

எழுத்தாளர்கள், இசையரசிகள், சொற்பொழிவாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும். நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

புற்றுநோய் சம்பந்தமான ஒரு சிறிய தொகுப்பு - அவசியம் வாசியுங்கள்

1. உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும்.

சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி தோன்றினால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். காரணம் பெண்களை மார்பகப் புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும்தான் அதிகளவில் தாக்குகின்றன.

2. திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். சிலர் அதற்குத் தாங்களாகவே ஏதாவது காரணம் கற்பித்துக் கொள்வார்கள். இது தவறு. நன்றாகச் சாப்பிட்டும் உடல் எடை தொடர்ந்து குறைகிற மாதிரி இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறவேண்டும்.

3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.

3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.

4. காலைக் கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிக்கல்தான். சிலருக்குத் திடீரென வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். இது ஓரிரு நாட்களில் சரியாகாமல் தொடர்ந்தபடி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

“மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம். ஆனால் நோயைக் குணப்படுத்துவதைவிட, அது வராமல் தடுப்பது சிறந்தது. சரியான உணவுப்பழக்கம்தான் அதற்குக் கைகொடுக்கும்” என்று நம்பிக்கை தருகிறார் அசார் உசேன்.

புற்றுநோய் அதிகம் தாக்கும் உறுப்பு எது?

இந்தியாவில் 2012-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். 2008-2011 வரையில் திரட்டப்பட்ட தகவல்களின்படி இது தெரிய வந்துள்ளது.

தேசியப் புற்றுநோய் பதிவு திட்ட (National Cancer Registry Programme – NCRP) அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான காலத்துக்குத் தயாரித்த அறிக்கை, இந்தியாவில் காணப்படும் புற்றுநோய் வகைகள் குறித்தும் அவை அதிகமாக உள்ள பகுதிகள் குறித்தும் சில முக்கியக் குறிப்புகளைத் தெரிவிக்கிறது. இந்தியாவில் 2012-ல் 6,82,830 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 3,56,730,பெண்கள் 3,26,100. அதாவது வளர்ந்தவர்களில் ஒரு லட்சம் பேரில் 64.49 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். உலகம் முழுக்க 2012-ல் 82 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

முதல்முறையாக, வட கிழக்கு மாநிலங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தின் மேல்பகுதிகளில்தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வாய்க்குழி, வாயும் உணவுக்குழாயும் இணையுமிடம், தொண்டையின் கீழ்ப்புறம், குரல்வளையின் மேல் பகுதி ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அசாமிலும் மேகாலயத்திலும் உணவுக்குழாய் புற்றுநோய் சகஜம். சிக்கிம், மிசோரத்தில் வயிற்றுப் புற்றுநோய் அதிகம்.

பெண்களைப் பொருத்தவரை மார்பகப் புற்றுநோயும் கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். மணிப்பூர், மிசோரத்தில் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம். மேகாலயத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் அதிகம். தைராய்டு சுரப்பியிலும் மார்பகத்திலும் புற்றுநோய் ஏற்படுவது கேரளத்தின் கொல்லம், திருவனந்தபுரத்தில் அதிகம்.

வயது அடிப்படையில்

உலகம் முழுக்கப் புற்றுநோயைக் கணக்கிடவும் மதிப்பிடவும் வயதை அலகாகக்கொள்வது வழக்கம். அதை ஏ.ஏ.ஆர். (Age adjusted or Age standardized rate) என்பார்கள். மேகாலயம் (கிழக்கு காசி மலை மாவட்டம்), மிசோரம் (அய்ஜால் மாவட்டம்), அசாம் (காமரூபம் மாவட்டம்) ஆகியவற்றில் ஏ.ஏ.ஆர். அதிகம். இங்கெல்லாம் உணவுக்குழாய், உணவுக்குழாயும் வாயும் இணையும் பகுதி, குரல்வளை ஆகியவற்றில் புற்றுநோய் தாக்குதல் அதிகம்.

சிறுவயது புற்றுநோய்

முதல்முறையாக, சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்தும் தனிக் கவனம் செலுத்தித் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்படும் நோயாளிகளில் குழந்தைகள் கணிசமாக இருக்கின்றனர். சிறுவர்களில் கிழக்குக் காசி குன்றுகள் (0.8%) குறைவாக உள்ள இடமாகவும் டெல்லி (5.8%) அதிகமாக உள்ள இடமாகவும் இருக்கின்றன. சிறுமிகளில் கிழக்கு காசி குன்றுகளில் குறைவாகவும் (0.5%) ஆமதாபாத் ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் (3.4%) புற்றுநோய் காணப்படுகிறது. பெரியவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பைக் கணக்கிடும்போது லட்சத்தில் இத்தனை பேருக்கு என்று கணக்கிடுவது வழக்கம். சிறுவர், சிறுமியருக்குப் பத்து லட்சத்தில் இத்தனை பேருக்கு என்றுதான் கணக்கிடுவது வழக்கம். குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை.
மேலும் :
http://edition.cnn.com/2016/03/04/health/cancer-treatment-research-breakthrough/

இரட்டை குழந்தைகள் இப்பவும் கருவறை சிந்தனையில்.-Video

இரட்டை குழந்தைகள் இப்பவும் கருவறை சிந்தனையில் இருப்பதால் கண்திறக்காமல் இருவரும் இருக்கும் நிலையை பாருங்கள்.

Saturday, March 5, 2016

மட்டக்களப்பின் சில உணவகங்களில்..

மட்டக்களப்பின் சில உணவகங்களில் இன்றைய நிலையை எடுத்துக்கட்டும் சில படங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.







மலேசியாவின் பாதுகாப்பு பணியாளராக இலங்கையர்களுக்கும் வாய்ப்பு

மலேசியாவில் பாதுகாப்பு பணியாளர்களாக கடமையாற்ற இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகவலை, மலேசியாவின் உள்துறை பிரதியமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் வெளியிட்டுள்ளார். மலேசியாவில், இதுவரை காலமும் 'கூர்க்காக்கள்' என்ற பெயருக்காக நேபாளிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், நேபாளத்திலிருந்து இந்தப் பணிகளுக்கு வருவோரின் தொகை வரையறைக்கு உட்பட்டிருப்பதால், வேறு நாட்டவர்களுக்கும் இதனை விஸ்தரிக்க தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையில் இருப்பதைப்போன்று இராணுவ அடிப்படையை கொண்டவர்களாக இருப்பதை தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து: விஞ்ஞானிகள் தகவல்

சென்னையை, கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என, சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் அண்ணா பல்கலையின் புவி அமைப்பியல் துறை இணைந்து, சென்னையில் பெய்த பெருமழை குறித்த, விஞ்ஞானிகளின் இரண்டு நாட்கள் கருத்தரங்கை, அண்ணா பல்கலையில் நடத்தின.
கருத்தரங்கில், விஞ்ஞானிகள் பேசியதாவது:'எல் - நினோ' எனப்படும், பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால், ஒரு குறிப்பிட்ட பகுதியில், எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்யும்; புவி வெப்பமயமாதலால் வறட்சியும் நிலவும்.சென்னையில் பெய்த பெருமழைக்கு, எல் - நினோ உட்பட, பல காரணங்கள் உள்ளன. வங்கக் கடலின் மேற்கில், சென்னையை ஒட்டியுள்ள கடலோரம் மற்றும் தரைப்பகுதி அதிக வெப்பமயமாகிறது; இதுவும், அதிக மழை பெய்ய காரணம்.சமீபத்தில் பெய்த பெருமழை போன்று வரும் காலங்களிலும், சென்னைக்கு மழை உண்டு; அது, எப்போது என கணிக்க முடியாது. எனவே, முன்னேற்பாடு அவசியம். தற்போதைய நிலையில், தமிழகத்தில் சராசரி மழை அளவு குறைந்துள்ளது; தென் மேற்கு பருவ மழையின் அளவு குறைந்து, வட கிழக்கு பருவ மழையின் அளவு அதிகரித்துள்ளது. நீரை சேமிக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் ராஜாமணி பேசியதாவது: சென்னையில், 2015 நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட பெரு மழை, எதிர்பாராத சம்பவமல்ல. வானிலை ஆய்வு மையத்தினர் தெளிவாக முன் அறிவிப்பு விடுத்தனர்; ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நம் அரசுகள் நகர்ப்புறத்தை கட்டமைப்பதில், போதிய கவனம் செலுத்தவில்லை. அனைத்து விவசாய நிலங்களும் கட்டடங்களாகி விட்டன. குளம், ஏரி போன்ற நீராதாரங்களை பாதுகாக்கவில்லை. நீரை சேமிக்க வழியின்றி, நகருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து, கடலில் சென்று கலந்து விட்டது. எதிர்காலத்தில், இந்த பிரச்னையை சமாளிக்க சுதந்திரமான விஞ்ஞானிகள் குழுவை, அரசு துறைகளுக்கு உதவ அமைக்க வேண்டும். அதில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், பேராசிரியர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் இயற்கை பேரிடர் வரும் முன், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய பெருமழையில், அதிக அளவுக்கு நீர் வீணானதால், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு தற்போதே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவன்,
முன்னாள் துணை பொது இயக்குனர் - இந்திய வானிலை ஆய்வு மையம்

கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை

கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என, ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.
கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் கருத்துகளையும் தாங்கள் கேட்கிறோம் என்பதையே இது காண்பிக்கிறது என அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த கண்டி மெதவாசல இல்லம் வெளிநாட்டவர்களின் புகைப்பட கண்காட்சிக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
மத்திய கலாசார நிதியம் ராணி ரெங்கம்மாள் தேவி வசித்த இல்லத்தை புனரமைப்புச் செய்திருந்தது.
இல்லத்தை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களிடம் ஒரு டொலர் கட்டணமாக அறவிடப்படவுள்ளதுடன் தேசிய சுற்றுலாப் பயணிகளிடம் 20 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு 10 ரூபாவும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும் இல்லத்தை பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் (1798 ஆம் ஆண்டு முதல் 1815 ஆம் ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார்.
இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன், முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினான்.
இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் சிறை பிடிக்கப்பட்டு, தமிழ் நாட்டின் வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் இயற்பெயர் கண்ணுசாமி என்பது குறிப்பிடத்தக்கது.


பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் - மங்கள சமரவீர

நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட   சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜனநாயக சமூகம் தொடர்பான நிகழ்வொன்றில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 
இலங்கையில் ஜனநாயகம் என்பது நீண்டகாலமாக பயங்கரவாதிகளின் தனிநாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அச்சுறுத்தலுக்குட்பட்டு காணப்பட்டது. அந்த பயங்கரவாதக் குழுவினர் சிறுவர்களை தமது படையில் இணைத்ததுடன், ஜனநாயகத் தலைவர்களையும் கொலை  செய்தனர். ஜனநாயகத்தை சீர்குலைத்தனர். அதனால் தான் ஜனநாயகத்தில் அங்கத்துவம் வகிக்காத பயங்கரவாத தடைச் சட்டத்தைக்கூட நாங்கள் கொண்டுவர நேர்ந்தது. 
பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஆரம்பித்தனர். 30 வருடங்களாக இலங்கையை பயங்கரவாதம் ஆட்கொண்டது. இக் காலத்தில் பல்வேறு அரசாங்கங்களின் தலைவர்கள் சர்வதேச உதவியுடன் பேச்சுவார்த்தைகளினூடாக தீர்வுக்கு செல்ல முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் ஜனநாயகம் மீண்டும் வலுவடையும் என மக்கள் எதிர்பார்த்தனர். யுத்தம் முடிந்ததும்  நல்லிணக்கம் முன்னெடுக்கப்பட்டு யுத்தத்தினால்  ஏற்பட்ட காயங்களை ஆற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் யுத்த வெற்றியைக் மிகப் பாரியளவில்  கொண்டாடியது. 
ஜனாதிபதியாக இரண்டு தடவைகளே  பதவிவகிக்க முடியும் என்பதற்கான  வரையறைகளை அரசியலமைப்பு திருத்தம் மூலம் அப்போதைய அரசாங்கம் நீக்கியது. சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டன, கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது, செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஊடகவியளாலர்கள் அச்சுறுத்தப்பட்டனர், சுயாதீன நீதித்துறை செயலிழந்தது, நடமாடும் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது, மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நாட்டை ஆட்கொண்டது. 
எவ்வாறெனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நிலைமை மாற்றமடைந்தது. முழு உலகத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்  வகையில் ஆசியாவில் மிக பழைய நாடான இலங்கையில் வன்முறையற்ற ரீதியில் சர்வாதிகாரம் நீக்கப்பட்டது. கற்கள், துப்பாக்கி குண்டுகளுக்குப் பதிலாக மக்கள் வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி மாற்றத்தை கொண்டு வந்தனர். 
இந்த வெற்றிக்குப் பக்கபலமாக தேர்தல் ஆணையாளரும் முப்படையினரும் பொலிஸாரும் இருந்தனர். ஜனவரி 8 ஆம் திகதி மட்டுமல்லாது  ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் அந்த வெற்றி மீள் உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்படும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும் வகையிலும் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர்  இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து  கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இது இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியது. மிகவும் மதிக்கத்தக்க மூத்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதிஷ்டவசமாக புலிகள் இன்று இல்லாமையின் காரணமாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வன்முறை  ஒரு காரணமாக இருக்கப்போவதில்லை. சமாதானத்திற்கான விருப்பம் மிகவும் தெ ளிவாக காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் தேசிய அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது. 
தற்போதைய இந்த சந்தர்ப்பத்தை  உரிய முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்  செல்ல முயற்சி செய்கிறோம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் போரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. 
அந்தவகையில் நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட   சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம். 
இலங்கை தற்போது ஜனநாயகமயப்படுத்தலை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் செயற்படுத்துகின்றது. அந்த வகையில் இலங்கையின்  யுத்தத்திற்கு பின்னரான வெற்றிகரமான பயணத்துக்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். 

Friday, March 4, 2016

உலகின் விடை கண்டு பிடிக்கப்படாத இரகசியங்கள் _ Video

இன்னும் எமக்கு தெரிந்த உலகின் விடை கண்டு பிடிக்கப்படாத இரகசியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றிலே சில வீடியோ வடிவில்.

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை - ஜனாதிபதி

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவ்வாறு இணையத்தளங்களை தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இணைய தளங்கள் தடை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் சிங்கள இணைய தளமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தளங்களை தடை செய்யும் திட்டங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு விரைவில் தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய ஊடமாக இணைய ஊடகங்கள் பிரபல்யம் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் இணைய தளங்களை முடக்குவதற்கோ அல்லது தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இணைய தளங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் ஓர் கட்டமாகவே இணைய தளங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவ்வாறு இணையத்தளங்களை தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இணையத்தளங்களை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
மக்களுக்கு விரைவாக தகவல்களை அறிந்து கொள்ளும் ஊடகமாக இணையத்தளங்கள் இலங்கையில் பிரபலமாகி வருகின்றன எனவும் அவற்றை எந்த காலத்திலும் தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐ நா தீர்மானத்தின் எதிரொலி வடகொரியா ஏவுகணை வீச்சு

வடகொரியா மீது மிகக்கடுமையான தடைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விதித்து சில மணிநேரங்களில், வடகொரியா, தனது கிழக்குக் கடலோரத்திலிருந்து குறுந்தூர எறிகணைகளைக் கடலுக்குள் ஏவியது. ஐ.நா தீர்மானத்துக்குப் பதிலடி வழங்கும் முகமாகவே இந்த எறிகணைகள் ஏவப்பட்டதாகக் கருதப்படுகிறது. 100 தொடக்கம் 150 கிலோமீற்றர் எறிபரப்புடைய 6 எறிகணைகள், கடலுக்குள் ஏவப்பட்டதாக, தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்தது. இவை, இலங்கை நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஏவப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் பேச்சாளர், கடலுக்குள் ஏவப்பட்டவை ஏவுகணைகளா றொக்கெட்டுகளா என்பதை, அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். அத்தோடு, வடகொரியாவினால் மேற்கொள்ளப்படக்கூடிய ஏனைய நடவடிக்கைகள் குறித்துக் கூர்மையான அவதானித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா மீதோ அல்லது சர்வதேச சமூகத்தின் மீதோ எதிர்ப்புகளை வெளியிடுவதற்கு, ஏவுகணைகளையோ அல்லது றொக்கெட்களையோ ஏவுவது, வடகொரியாவின் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  


Thursday, March 3, 2016

இலங்கை: செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும் தராதரங்களுக்கும் உட்பட்டவகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31-ம் திகதிக்கு பின்னர், பதிவுசெய்யப்படாத இணையதளங்கள் சட்டத்துக்கு முரணானவையாக கருதப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
இவ்வாறான அறிவித்த முந்தைய அரசாங்கக் காலத்திலும் விடுக்கப்பட்டதாகவும் சில இணையதளங்கள் அப்போதைய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாகவும் இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ்மிரர் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் ஏ.பி. மதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தினால் சில இணையதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை புதிய அரசாங்கம் தளர்த்தியதாகவும், ஆனால் இப்போது ஊடக நெறிமுறைகளுக்கு புறம்பாக பல இணையதளங்கள் இயங்குவதாக அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் சில இணையதளங்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற நிலையில், இவ்வாறான அறிவித்தல் அரசாங்கத்திடமிருந்து வந்திருப்பதையும் மதன் சுட்டிக்காட்டினார்.
இணையதளங்களை பதிவு செய்வதன் மூலம், அவற்றில் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பானவர்களை கேள்விக்குட்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரீதியில் இந்த அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருப்பதாகவும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஏ.பி. மதன் தமிழோசையிடம் கூறினார்.

நன்றி பிபிசி தமிழ் 

Wednesday, March 2, 2016

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எட்டு கார்கள் வெடித்து சிதறின. அதே பகுதியில் மறைந்திருந்த மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அப்போது, இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஆப்கான் தேசிய போலீஸ் படை வீரர்கள் இணைந்து தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதலில் இந்திய தூதரகம் கடுமையாக சேதம் அடைந்ததாகவும், அதில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப், “ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 

ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தூதரகம் முன்பு வந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். மற்றொருவன் கார்கள் நிறுத்துமிடத்தில் தாக்குதல் நடத்தினான். மற்ற 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையின்போது கொல்லப்பட்டனர்” என்றார்.

சவுதி இராணுவ முகாம் மீது யேமன் இராணுவத்தினர் ஏவுகணைத் தாக்குதல்.

யேமனின் மரிப் மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சவுதி இராணுவ முகாம் மீது யேமனிய இராணுவத்தினர் இன்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் யேமனின் அரபு மொழி அல்- மசீரா இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், மரிப் மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ரடாவீன் சவுதி இராணுவ முகாமை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டளவு சவுதி படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த ஏவுகணைத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த சவுதி படையினரின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், யேமனின் தென்மேற்கு மாகாணமான தைஸின் ஜபல் அல் -முஷாரஃப் பகுதியில் நிலைகொண்டுள்ள சவுதி துருப்புக்கள் மற்றும் அவர்களின் இராணுவ உபகரணங்களை இலக்கு வைத்தும் இன்று யேமனியப் படையினர் மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் மரிப் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சவுதி துருப்புக்களை யேமனிய படையினர் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ: உலகின் மிகவும் ரகசியமான பாதுகாக்கப்படும் இடங்கள்

உலகில் மிகவும் ரகசியமான பாதுகாக்கபடும் இடங்கள் 10 உள்ள அதில் முக்கியமானவை


ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட், நோர்வே


பூமியில் மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்படுகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். அடுத்தது என்னவாகும்? மக்களின் வாழ்க்கை சூழல் சூறையாடப்படும்.
பூமியின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அழிவை சந்திக்கும். உணவுக்காக மக்கள் என்ன செய்வார்கள்?

அத்தகைய சூழலில் உதவியாக இருக்கும் ஒரே இடம் இந்த ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட் தான்.

நார்வேயின் எல்லைக்குட்பட்ட ஸ்பிட்பெர்கன் தீவில் அமைந்துள்ள இந்த வாலட்டில் 250 மில்லியன் அளவில் 300 வகையான தானியங்களின் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
எனவே இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு அழிவுகளாலோ தானியங்கள் அழிந்து போனால் இங்கிருந்து விதைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

எத்தகைய சூழல்களிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பகுதியில் முக்கியமானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

நீஹாவ், ஹவாய்

ஹவாயில் உள்ள இந்த நிஹாவ் தீவு பூர்வக்குடி மக்கள் வாழும் சிறிய தீவு ஆகும். மேலும் அரிய தாவரங்கள், அழிவு நிலையில் உள்ள விலங்கினங்கள் ஆகியவை இந்த தீவில் உள்ளன. இந்த தீவில் 130 நிரந்தர பூர்வக்குடி மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த தீவில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

வெளியாட்கள் வருவதை தடுப்பதற்காகவே 24 மணி நேரமும் கடலோர படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தீவில் வசிப்பவர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே தீவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் விமானப்படை மென்வித் ஹில், இங்கிலாந்து


இங்கிலாந்தில் வடக்கு யோர்க்‌ஷயர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமானப்படை தளம் உலகில் உள்ள மிகப்பெரிய கண்காணிப்பு மையமாகும்.அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் புலானாய்வு துறைகளின் கூட்டு முயற்சியுடன் இம்மையம் செயல்பட்டு வருகிறது.எந்தவகையான ஏவுகணை தாக்குதல் நடக்கிறது என்பதை கண்டறியக்கூடிய இடமாகும்

பனிப்போர் காலத்தில் ரஷ்யாவின்  செயல்பாடுகளை கண்டுபிடிப்பதற்காக இம்மையம் கட்டப்பட்டது. தற்போது சர்வதேச தீவிரவாத செயல்பாடுகள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக புலானாய்வில் ஈடுபட்டு உள்ளன.

மேலும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த (ஈச்லோன்) ECHELON அமைப்புடன் கூட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இதன் உள்ளே என்ன நடக்கிறது என்ற ரகசியம் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.

வாடிகன் ரகசிய காப்பகம், வாடிகன்

வாடிகனில் அமைந்துள்ள இந்த நூலகம் உலகின் மிக முக்கிய பாதுகாப்பு நூலகமாகும். கடந்த 8 ஆம் நூற்றாண்டில் இருந்து போப் தொடர்பான ரகசியங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.இதன் காரணமாக வெளியாட்களுக்கு இந்த நூலகத்தில் அனுமதி அளிப்படுவதில்லை. தகுதி நிறைந்த அறிஞர்களுக்கு மட்டுமே நூலகத்தின் உள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

அதுவும் அவர்கள் எந்த காரணத்திற்காக செல்கின்றனர், அவரது தனிப்பட்ட விபரங்கள் ஆகியவை அறிந்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

 பகுதி 51, நிவேடா

அமெரிக்காவின் நிவோடா பகுதியில் அமைந்துள்ள இந்த ராணுவ தளம் பற்றிய தகவல்கள் வியட்னாம் போரின் போதுதான் வெளியெ தெரிய வந்தது.அமெரிக்க புலானாய்வு அமைபின் ராணுவ தளமாக செயல்படும் இதில் அமெரிக்கா தொடர்பான மிகவும் முக்கிய ரகசிய தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இங்கு என்ன உள்ளது, எந்த காரணத்துக்காக இந்த இடம் செயல்படுகிறது போன்ற தகவல்கள் யாரும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சுனாமி அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஒரு பெரிய நிலநடுக்கம்  8.1 ரிக்டர் அளவில்  கடற்பகுதியில் தாக்கிய பின்னர் இந்தோனேஷியா ஒரு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவுக்கு ஆபத்தில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ராவுக்கு தென்மேற்கே உள்ள படாங்கில் இருந்து 808 கி.மீ. தூரமுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி மால 6.20 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமத்ராவை ஒட்டிய மேற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் அசெக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் : அமெரிக்கா

வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களினடம் வழங்கப்பட வேண்டுமென, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வொஷிங்டனில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்குடைமை கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றீடுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமென்றும் தெரவித்துள்ளது.
எதிர்காலத்தில் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த ஆதரவு வழங்குமென்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தி நல்லிணக்கத்தை எற்படுத்துதல், நீதி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை நிறுத்துகிறது பார்க்லேஸ் வங்கி.

பிரிட்டிஷ் வங்கியான பார்க்லேஸ், ஆப்பிரிக்காவில் தனது நடவடிக்கைகளை விற்றுவிட முடிவுசெய்திருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டில் அந்த வங்கியின் பங்குகளின் விலை பாதிக்கும் கீழ் குறைந்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவை பார்க்லேஸ் எடுத்திருக்கிறது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பார்க்லேஸ் ஆஃப்ரிக்கா வங்கியில் தனக்கு இருக்கும் 62 சதவீத பங்கை படிப்படியாக குறைத்துக்கொள்ளப் போவதாக பார்க்லேஸ் தெரிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்திருப்பதும் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு குறைந்திருப்பதும் பார்க்லேஸின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
பங்குகள் கைமாறுவதால் தன் நடவடிக்கைகள் மாறாது என பார்க்லேஸ் ஆஃப்ரிக்கா தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 12 நாடுகளில் சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் வாடிக்கையாளர்களை இந்த வங்கி வைத்திருக்கிறது.

புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம்.



புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது.
இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளியை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், புற்றுநோயினால் ஏற்படும் அகால மரணங்களை குறைக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு, இந்த செயலியை அனைத்து சுகாதார அதிகாரிகளும் தரவிறக்கம் செய்து பாவிக்குமாறு, ஸ்காட்லாந்தின் சுகாதார அமைசசர் ஷோனா ராபின்சான் கேட்டுக் கொண்டுள்ளார்.