Wednesday, March 2, 2016

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எட்டு கார்கள் வெடித்து சிதறின. அதே பகுதியில் மறைந்திருந்த மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அப்போது, இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஆப்கான் தேசிய போலீஸ் படை வீரர்கள் இணைந்து தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதலில் இந்திய தூதரகம் கடுமையாக சேதம் அடைந்ததாகவும், அதில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப், “ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 

ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தூதரகம் முன்பு வந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். மற்றொருவன் கார்கள் நிறுத்துமிடத்தில் தாக்குதல் நடத்தினான். மற்ற 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையின்போது கொல்லப்பட்டனர்” என்றார்.