Friday, June 5, 2015

பிரபஞ்ச ரகசிய கண்ணோட்டம்


(How to grow a plant, The age of earth, Future world-Discovery channel, அறிவியலின் வரலாறு, The origin of life - A.I. Oparin ஆகியவற்றில் இருந்து தொகுத்தவை.)
நாம் வாழும் இந்தப் பூமியினை விண்வெளியில் இருந்து பார்த்தோ மெனில் அழகிய வேலைப்பாடமைந்த மிகப் பெரிய பந்து போலக் காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கும் போது கண்ணில் தெரியும் நட்சத்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்கள் பற்றிய ஒரு விரிவான தொடர்தான் இந்தப் பிரபஞ்ச ரகசியம்.

சூரியன் போன்ற எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸி (Galaxy). மேலும், கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இவற்றின் இருப்பிடமான  இப்பிரபஞ்சம் மிதந்துகொண்டு இருக்கும் பேரண்டம் குறித்து, அறிவியல் பூர்வமாக அறிவியலாளர்களின் கூற்றைக் கொண்டு தெரிந்து கொள்வோம்.
நட்சத்திரங்கள்
நாகரிகம் வளர்ச்சியடையாத காலகட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் அதிக பாதிப்பு  ஏற்பட்டதைக் கண்ட ஆதிமனிதன் தனது அறியாமையினால் இதனைத் தனக்கு மிஞ்சிய சக்தியின் செயல் என்றான். சுயநல எண்ணம் கொண்டவன் அதையே கடவுள் என்று கதை கட்டினான். ஆனால், நாகரிகம் வளரவளர வெள்ளம் வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அணைகளைக் கட்டி ஆற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி ஆற்று நீரைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டான்.
குகைகளில் காட்டுமிராண்டியாக  வாழ்ந்த காலத்தில், இடி இடித்து மின்னல் வெட்டுவதைக் கண்டு கடவுள் கோபப்படுகிறார் என்று நினைத்தனர். நாகரிகம் வளர்ந்த பிறகு, மின்னலுக்கான காரணத்தைக் கண்டறிந்து  அதைக் கட்டுப்படுத்த இடிதாங்கிகளைக் கண்டறிந்தனர், கடந்த 200 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் அறிவுத்திறன் காரணமாக, இயற்கையின் இரகசியத்தை ஆய்வுகளின் மூலமாகவும், தொலைநோக்கிக் கருவிகள் மற்றும் கணிதச் சமன்பாடுகள் வாயிலாகவும் நம்மைச் சூழ்ந்திருந்த சந்தேக இருளை அகற்றி பல தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றனர்.
ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் மனிதர்களுள் மிகவும் வித்தியாசமானவர், விண்வெளி அறிவியல் பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் இவரை அறிந்திருப்பார்கள். 10 லட்சத்தில் ஒருவருக்கும் மட்டும் ஏற்படும் நரம்புச் செயலிழப்பு நோயினால் இவரது உடலின் வெளி உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து போயின. இவரால் பேச முடியாது, சாப்பிட முடியாது, கேட்கும் திறன் மிகக் குறைவு.
ஆனால், இவர் மிகச் சிறந்த விண்வெளி ஆய்வாளர். இவர் தனது அறிவியல் அறிவைத் தனக்குள் அடக்கிவிடவில்லை. அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழு மற்றும் பிலடெல்பியா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வுக்குழு இணைந்து  இவருக்காக புதிய கருவி ஒன்றைக் கண்டறிந்தது.
அந்தக் கருவி இவரின் கண் அசைவையும் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கணினித் திரை வழியாக உலகிற்குக் கொண்டு வரும் உயர்விஞ்ஞானம், எதிர்காலத்தில் இவர் பிரபஞ்ச வரலாற்றின் தந்தை என்று கூறும் அளவிற்கு இவரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அமைந்தன.
ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங்
மனிதன் தோன்றியது முதல் வெற்றுக் கண்களால் வானத்தைப் பார்த்து தனக்குள் கேட்டுக்கொண்டு இருந்த கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். இவருக்கு முன்பும் பல அறிவியல் ஆய்வாளர்கள் விண்வெளி அறிவியல் பற்றிக் கூறி இருக்கின்றனர். அவர்களின் கருத்துகள் மற்றும் புதிய தொழில்நுட்பக் கருவிகள், கணிதச் சமன்பாடுகள் மூலமாக இவர் கூறியவை, நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக  நிலவில் பாதம் பதித்த மனித வரலாற்றுச் சாதனையைவிட மிகப்பெரும் சாதனையாக இருந்து வருகிறது.
ஸ்டீஃபன் ஹாக்கிங் எளிமையான சில கேள்விகளை நம்முன் வைத்தார். அதற்கான விடைகளைத் தேடினார். அந்த விடைகள் மனித குல தோற்றத்தின் வரலாறு மட்டுமல்ல, விண்ணில் காணும் அனைத்துப் பொருட்களின் ரகசியங்களையும் சான்றுகளோடு நமக்குத் தந்துள்ளன. இதன் மூலம் இன்றும் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சாமி, சாத்தான், பேய், பிசாசு போன்ற நம்பிக்கைகள் ஊழிக்காற்றில் குப்பை மேட்டுச்சாம்பல் போல் காணாமல் போகும்.
அவரின் கேள்விகள் எளிமையானவை. அவை...
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்தோம்?
ஏன் வந்தோம்?
எங்கு செல்வோம்?
எப்போது செல்வோம்?
நமது எல்லை என்ன?
நமக்கு முன் யார் இருந்தார்கள்?
அவர்கள் எங்கிருந்தார்கள்?
இப்போது எங்கே?  இவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்த அமைதியில் இதற்கெல்லாம் விடை சொல்கிறார் என்று நினைக்க வேண்டாம். இவர் வினாக்களை நம்முன் வைக்கிறார். லண்டன் ஒலிம்பிக்கில் இவர் கூறிய வார்த்தை நான் சொல்லும் விடையில் இருந்து கேள்விகளை உருவாக்குங்கள், அதற்கான விடைகளைத் தேடுங்கள் என்பதாகும்.
இதனைத்தானே நமது அறிவாசான் பெரியாரும் கூறினார். நாம் யார்? இந்தக் கேள்விக்கான விடை காண்பதற்கு முன்பு நமது இருப்பிடம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதாவது பூமி. 2012 ஆம் ஆண்டு வரை சுமார் 3 லட்சம் நட்சத்திரக் கூட்டங்கள் (பால்வெளி மண்டலங்கள்)  இருப்பதை மேலைநாட்டு விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  விண்வெளியில் அடர்த்தியான மேகக்கூட்டங்களின் கூட்டம் ஒன்று இருப்பதை அண்மையில் (2012 அக்டோபர்) பெரு நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இவை உண்மையில் எண்ணிலடங்கா பால்வெளி மண்டலங்களால் ஆனவை என்று முப்பரிமாண சோதனையில் தெரிய வந்தது. நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரத்தின் எண்ணிக்கையே இன்னும் விஞ்ஞானக் கணக்கீட்டால்கூட கண்டறியாத நிலையில் எத்தனை பால்வெளி மண்டலங்கள், அதில் உள்ள நட்சத்திரங்கள் எவ்வளவு என்பது பற்றி அறிவது தற்போதைய காலகட்டத்தில் உள்ள அறிவியல் வளர்ச்சியில் சிரமமான காரியம். எதிர்கால அறிவியலில் இது சாத்தியமாகும். (இவற்றைப்பற்றி விரிவாக வரும் தொடர்களில் காண்போம்). நமது சூரியன் இந்த நட்சத்திரங்களுக்கு முன்பு கால்பந்தின் அருகில் வைக்கப்பட்டுள்ள கடுகு போன்றதுதான்.
அப்படியென்றால் நமது கிரகங்கள், ஆம் பிரபஞ்சத்தின் முன்பு நாம் ஒரு நானோ எலக்ட்ரான் (அணுவிலும் சிறியது) அளவைவிடச் சிறியவர்கள்.
உயிரினத் தோற்றம்
பூமியில் உயிரினத் தோற்றம் குறித்து ஆண்டுதோறும் பலவிதமான ஆய்வுகள் வந்து கொண்டே உள்ளன.  13ஆ-ம் நூற்றாண்டு வரை மதம் தொடர்பான கருத்துகளே பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இருந்தது.  அதிகார மய்யத்தின் உயர்வான இடத்தில் மதகுருமார்கள் இருந்ததால் அவர்களை எதிர்த்துத் தங்களது கருத்துகளைக் கூற யாருக்கும் துணிச்சல் இல்லை. இந்த நிலையில் சார்லஸ் டார்வின் (1809 - 1882) என்ற ஆங்கிலேயே உயிராய்வாளர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைத் தோற்றுவித்தார். (தென் அமெரிக்கக் கண்டத்தின் எல்லைகளை வரைவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் இவரை அனுப்பியது.
சுமார் எட்டு ஆண்டுகளாக பல தீவுகள், நாடுகள் விதவிதமான விலங்கு, பறவை, ஊர்வன போன்றவற்றைக் கண்டு அவற்றை ஆய்வு செய்தபோது, ஒன்றில் இருந்து ஒன்று வந்திருக்கக்கூடும் என்று கண்டுபிடித்தார். தன்னுடைய ஆய்வை 8 தொகுப்புகள் கொண்ட நூலாக வெளியிட (The Origin of Species) அதுவே உயிர் பரிணாமக் கோட்பாட்டின் முதன்மையான நூலாக உயிரியல் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அறிவியல் வளர்ச்சி என்றால் என்ன?
ஒருவரது கருத்து கேள்வியாகும் சமயத்தில் அதன் விடைதான் அறிவியல் வளர்ச்சியாகும். அந்த விடை பல கேள்விகளை உருவாக்கும். இப்படி, தொடர் வினா விடைகள்தான் அறிவியலில் பரிணாமம் என்ற தத்துவத்தின் படிகள். தொடர்ந்து உயிரினத் தோற்றம் பற்றி பல ஆய்வுகள் வர ஆரம்பித்தன.
விண்வெளி முழுவதும் நீர்
விண்வெளியை ஆராய்ந்து கொண்டு இருக்கும்  அமெரிக்க செயற்கைக்கோள் வாயேஜர் 1980இ-ல் அனுப்பிய புகைப்படங்கள் இதுவரை வெறும் ஊகங்களாகவே இருந்த விண்வெளியில் நீர் இருக்கும் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அது அனுப்பிய சில படங்களில் விண்மீன்களின் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிறப்பிரிகை உருவானது கண்டறியப்பட்டது.
நாம் காணும் வானவில் எப்படி உருவாகிறது?
மேகத்தில் இருந்து குளிர்ந்த நீர் பட்டு மழைபெய்யும் பொழுது அந்த நீர்த்திவலைகளின் மீது சூரிய ஒளிபட்டு ஏற்படும் அறிவியல் மாற்றம்தான் வானவில் எனப்படும் நிறப்பிரிகை.
ஆனால், விண்வெளியில் எப்படி இந்த நிறப்பிரிகை ஏற்பட்டது, அங்குதான் நீர் கிடையாதே என்ற கேள்விக்கு விடை... ஆம்! அங்கு நீர் உள்ளது,  அங்கு பனிக்கட்டி வடிவில், உறைபனி வடிவில், நீர் மூலக்கூறுகள் முழுமை பெறாமல் நீராவியாக வாயுக்களின் கலவையின் ஊடே ஓர் அடர்த்தியான நிரந்தர மேகங்களின் வடிவில் விண்வெளி எங்கும் தண்ணீர் இருக்கின்றது. வாயேஜர் கொடுத்த முடிவின்படி நமது விண்வெளியில் நாம் எங்கெல்லாம் பார்க்கின்றோமோ, அங்கெல்லாம் தண்ணீர் நிறைந்திருக்கிறது என்ற கருத்து உண்மையானது.
1980 வரை பிரபஞ்சம் ஒரு வறண்ட வெற்றுவெளி எனவும் தூசுகள், வாயுக்கள் மற்றும் நட்சத்திரங்கள், விண்கற்கள் மட்டுமே உண்டு என்ற வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.  விண்வெளி எங்கும் காணும் நீர் நாம் எங்கிருந்து வந்தோம் என்ற இரகசியத்தின் சிறு பகுதியை நமக்குத் தருகிறது. அவற்றை வரும் தொடரில் காணலாம்.  
- சரவணா ராஜேந்திரன்