Sunday, February 15, 2015

விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்! யாழில் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பிப்பதனை தடுக்க பலர் முயற்சிப்பதை எதிர்த்தும், அந்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. 

இதனை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் இராஜகுமாரன் தெரிவித்தார். 


யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் இங்கு மேலும் கூறுகையில், 

இதனை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உட்பட ஊழியர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்த மாபெரும் பேரணியின் போது, விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்க வலியுறுத்தி, ஜநா மனித உரிமை பேரவைக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். 

இறுதி போரின் போது மிக உச்சக்கட்டமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. வன்னியில் இனப்படுகொலை நடாத்தப்பட்டது. 

சர்வதேச நாடுகளும், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தினாலும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை என உணர்ந்து, ஜ.நா சபையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது. 

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினைக் கூறி பலர் இந்த விசாரணை அறிக்கையினை தாமதிக்க முயற்சிக்கின்றார்கள். 

இந்த விசாரணை அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு தாமதிக்கப்படுமாயின், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும் என்பதன் அடிப்படையில், இந்த நீதி கிடைக்காமல் போய் விடும். 

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார். 

(அத தெரண)