Sunday, February 15, 2015

வட மாகாணசபையின் தீர்மானம் மதிக்கப்பட வேண்டும்!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கூறுகின்றது. 


அந்த விசாரணை தற்போது முடிவடைந்திருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ​தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அறிக்கையை அடுத்த மாத இறுதியில் வெளியிடாமல் சிறிது காலம் பிற்போடுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. 

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணங்களையும் மேற்கொண்டு உரிய தரப்புக்களுடன் சந்திப்புக்களையும் நடத்தியுள்ளார். 

சர்வதேச பங்களிப்புடன் உள்நாட்டில் நம்பகத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும் என்று புதிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தும் உள்ளது. 

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா. சம்பந்தன், ´ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும். அந்த அறிக்கையை இல்லாமல் செய்வதோ அல்லது தாமதமாக வெளியிடுவதோ ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல´ என்றார். 

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஆகியோருடன் இடம்பெற்றிருந்த சந்திப்புகளின் போதும் இதனை தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவிக்கின்றார். 

´அந்த அறிக்கை வெளிவர வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களால் கூட உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்´ என்றும் அவர் குறிப்பிட்டார். 

போரின் போது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று வடக்கு மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், அந்த தீர்மானம் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 

(பிபிசி)