Sunday, February 1, 2015

ஸ்ரீபவன் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும்: சி.வி


இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

இலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுவந்தது. இந்த சூழ்நிலையிலேயே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44வது பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவனை நியமித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த நீதியரசர் என்ற ரீதியில் கே. ஸ்ரீபவனுக்கு பிரதம நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் பிபிசியிடம் கூறினார். இலங்கை சட்டக்கல்லூரியில் கே. ஸ்ரீபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறுகின்றார். எனினும், நீண்டகால பிரச்சினைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால் தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நீதித்துறைக்கு முறைப்படி வந்தவர் ஸ்ரீபவன் என்றும் கூறிய விக்னேஸ்வரன், ´ஆனால் மற்றவர்களும் அவ்வாறே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் முன்னேற வேண்டியவர்களை தடுத்து மேலே கொண்டுவரப்பட்டவர்கள்´ என்றார் விக்னேஸ்வரன். சில நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஆக்கப்பட்டு, சிறிதுகாலத்தில் உயர்நீதிமன்றத்துக்குள் புகுத்தப்பட்டவர்கள் என்றும் முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார். எனினும், ஸ்ரீபவன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இருந்து, தனக்கு உரிய காலம் வந்தபோதே உயர்நீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமனம் பெற்றுவந்தவர் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.