Sunday, February 13, 2011

சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்சித் தகவல்

உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர். நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.

இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு   கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரிகள் கூறியதாவது: மரப் பெருஞ்சுவர் பற்றி சீன வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. அது உண்மைதான் என தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.