Sunday, February 28, 2016

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் ஏழ்மை ஏன்?

இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டமும், அதற்கு அடுத்ததாக மன்னார் மாவட்டமும் உள்ளதாக, உலக வங்கியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பருத்தித்துறை அபிவிருத்திக்கான ஆய்வு மையத்தின் ஆய்வாளர் மு.சர்வானந்தன், நிலப்பரப்பில் ஒப்பீட்டளவில் பரந்துபட்ட மாவட்டங்களான இவை, காலாகாலமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும், அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களையும் இடர்களையும் எதிர் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அங்குள்ள மக்கள் ஒரு சில இடங்களில் மட்டும் செறிந்து வாழ்கின்றமை வறுமை நிலைக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இந்த மாவட்டங்களின் வறுமை நிலைக்கு முன்னைய அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டினார்.
இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பபதுடன், துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்து கொடுப்பதன் ஊடாக, வறுமையைப் போக்கி மாவட்டத்தை அபிவிருத்தி நோக்கி எடுத்துச் செல்ல முடியும் என, விவசாயம் மற்றும் மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மட்டக்களப்பு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளும் வறுமையின் பிடியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - பிபிசி தமிழ்