ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர், இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றையை முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். இதன்போது ஐ.நா ஆணையாளர், இலங்கை தொடர்பான விரிவான விளக்கமொன்றை அவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இங்கு தாம் அறிந்த விடயங்கள், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், இதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களையும் முன்வைக்கவுள்ளன.
ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னரான அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக செயற்பட்டு பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா, கடந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பான வகையில் பிரேரணை முன்வைத்ததோடு, அதற்கு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இணை அனுசரணையும் வழங்கியிருந்தன.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 31ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.