Tuesday, July 12, 2011

' நேக்ட் மோல்' எலி மூலம் புற்று நோய் மருத்துவத்தில் புரட்சி.

' நேக்ட் மோல்' எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கெதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே முதன்முறையாக இவ்வகை எலியின் முழு மரபணு வரைவினை வெளியிட்டுள்ளனர்.


லண்டன் குயீன்மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இவ்வாய்வை மேற்கொண்டுள்ளனர்.

' நேக்ட் மோல்' (Naked Mole) எலிகள்

இவ்வகை எலிகளானது கிழக்கு ஆபிரிக்காவில் பரவலாக உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்களாகும். அதாவது சாதாரண எலிகளை விட 7 முதல் 10 மடங்கு அதிக காலம் இவை வாழக்கூடியவை.

தோற்றத்தில் இந்த எலி இனமானது முற்றிலும் வித்தியாசமானதும் வெளிர் நிறமானதும் மயிர்கள் அற்றதுமான தோலைக் கொண்டுள்ளன.



இவற்றின் சிறப்பம்சம் யாதெனில் இவற்றுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லையென்பது தான். இவை வலியை உணர்வதில்லை இதைவிட இவற்றின் தோலானது திராவகத்தினால் கூட பாதிப்படைவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் நிலத்தின் அடியில் குறைந்த ஒட்சிசன் அளவுடன் இவை நீண்ட நாட்கள் வாழக்கூடியன.

இக்காரணங்களே இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் ஆராய்ச்சியானது வெற்றியளிக்குமானால் அது மனித குலத்துக்குப் பாரியளவில் நன்மையளிக்குமென்பது உறுதி என நம்பப்படுகிறது.