Tuesday, May 17, 2011

பிரபஞ்சம் - ஓர் சுருக்க விளக்கம்.

ஆரம்ப காலங்களில் மனிதன் தான் வாழும் இடத்தையும் தனக்கு மேல் உயரே நீண்டு சென்ற ஆகாயத்தையும் மட்டுமே பிரபஞ்சம் என்று கருதி வந்தான். ஆகாயம் என்பது கூட பெரிய மலைகளுக்குச் சற்று மேலே எட்டி விடும் தூரத்தில் தான் அமைந்திருப்பதாக அவனுக்குப் பட்டது.

எனவே ஆதி கால மனிதனின் பிரபஞ்சம் என்பது குறுகலான ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல மனிதனின் அறிவு விரிந்தது. அதனால் பிரபஞ்சம் பற்றின அவனது கருத்துக்களும் கூட மாறிக் கொண்டே வந்தது.

பிரபஞ்சம் என்பது உண்மையில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகும். நாம் வாழும் பூமி, சூரியக் குடும்பம், பல கோடி விண்மீன்கள், பல கோடி காலக்சிகள், குவாசர்கள் என்று பிரபஞசம் என்பது எல்லாவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தைப் பற்றி மனிதனின் அறிவு இன்னும் விரிந்து கொண்டே தான் இருக்கிறது.

பிரபஞ்சம் என்பது மனித அறிவுக்கு இன்னும் கூட சவாலாகவே உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு உடல்களைப் பற்றின மனிதனின் அறிவு விரிவடைந்தாலும் கூட, மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளவு அது பெரியதாக இருப்பதால், அவனால் பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிய முடியவில்லை. பூமி தான் பிரபஞ்ச மையம் என்றும், விண்ணில் காணப்படும் எல்லா உடல்களுமே பூமியையே சுற்றி வருவதாகவும் கருதிய காலம் மாறி, பூமி என்பது பிரபஞ்சக் கடலில் ஒரு சிறு துளிதான் என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.