Monday, February 21, 2011

பூமியில் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறியமுடியுமா? முடியுமே!

வெயில், காற்று, மழை, புயல், சூறாவளி, காட்டுத்தீ என இயற்கை சீறும்போது மனிதகுலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க முடியாது என்றாலும் தப்பிக்கும் வித்தையை தெரிந்து வைத்திருப்பது நமது அறிவியல், தொழில்நுட்பத்தின் சாதனை. கடல் அலை மட்டத்தில் ஏற்படும் விபரீத மாற்றத்தை வைத்து சுனாமியையும் முன்கூட்டி உணரக்கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.

இதில் அடுத்தகட்ட முயற்சி..வரப்போகும் பூகம்பத்தை முன்கூட்டி தெரிந்துகொள்வது. இங்கிலாந்து மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் லண்டன் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆலன் ஸ்மித், விட்டாலி சிம்யேரெவ் ஆகியோர் தலைமையில் இணைந்து மாஸ்கோவில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, செயல்பாடுகளையும் துவக்கியுள்ளனர்.

‘ட்வின் சாட்’ என்பது இந்த ஆய்வில் ஈடுபடப்போகிற செயற்கைக்கோள்கள். ஒன்று டிவி பெட்டி சைஸில் இருக்கும். இன்னொன்று அதையும்விட சிறியது. சற்று பெரிய டிபன் பாக்ஸ் சைஸ்தான். விண்ணில் செலுத்தப்படும் இந்த இரண்டும் சில நூறு கி.மீ. தொலைவில் பூமியை வட்டமடித்துக் கொண்டே இருக்கும். எரிமலையின் செயல்பாடுகள் மற்றும் பூமியில் கணிசமான விபரீத மாற்றங்கள் தெரிந்தால், ‘‘உஷாரய்யா.. உஷாரு’’ என்று தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு சாட்டிலைட்களில் இருந்து தகவல் வரும்.

நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சாட்டிலைட்கள் இரண்டும் ‘கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு’ அந்த இடத்தை கண்காணிக்கும். இதை 2015ல் விண்ணில் செலுத்த உள்ளனர்.