Saturday, January 15, 2011

பூமியில் மனித இனத்துக்கு ஆபத்து?

அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால், மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:


நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. எனினும், மனித இனம் பூமியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அடுத்த சில நூற்றாண்டுகளில் பூமியில் மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் சில சமயங்களில் மனித இனம் இனியும் தப்புமா? என்ற கேள்வி எழுந்ததும், அதிலிருந்து நூலிழையில் தப்பியதையும் அறிவோம். 1963ல் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுதவிர, 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரி க்கா அணுகுண்டு விசியதால் லட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களிலும் அடிக்கடி நிகழ வாய்ப்பு உள்ளது. இவ ற்றை எல்லாம் எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பூமி வெப்பமாதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு விஷயங்களை தடுக்க வேண்டும். இவையெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயம் அல்ல. இதிலிருந்து தவறினால் மனித இனமே கூண்டோடு அழியலாம்.

எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் கடந்து மனித இனம் வாழ வேண்டுமானால், வேற்று கிரகங்களில் குடியேற்றுவது அவசியமாகிறது. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.